கடந்த வார இறுதியில் டொராண்டோவின் குவீன் வெஸ்ட் (Queen West) பகுதியில் உள்ள நிறுவனம் ஒன்றிற்குள் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, தோட்டாக்கள் நிரப்பப்பட்ட துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன், 29 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பல குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.
இச்சம்பவம் குவீன் ஸ்ட்ரீட் வெஸ்ட் (Queen Street West) மற்றும் பாத்தர்ஸ்ட் ஸ்ட்ரீட் (Bathurst Street) பகுதிக்கு அருகில் உள்ள, பெயர் குறிப்பிடப்படாத நிறுவனம் ஒன்றிற்குள் நடந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கிடைத்த தகவலையடுத்து, அதிகாலை 3:10 மணியளவில் அப்பகுதிக்குத் தங்களை அழைத்ததாக டொராண்டோ காவல்துறையினர் தெரிவித்தனர்.
புலனாய்வாளர்களின் கூற்றுப்படி, அப்பகுதியில் உள்ள நிறுவனத்திற்கு வந்த நபர் ஒருவர் அங்கிருந்த பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதன் பின்னர், அவர் தனது துப்பாக்கியை எடுத்து சுட்டதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்பட்டதாகப் பதிவாகவில்லை.
காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வரும் வரை அந்த நபர் அங்கிருந்தவர்களால் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் அதிகாரிகளால் காவலில் எடுக்கப்பட்டார்.
சம்பவ இடத்திலிருந்து தோட்டாக்கள் நிரப்பப்பட்ட துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக டொராண்டோவைச் சேர்ந்த 29 வயதான கைல் ஆலன் காலாண்ட் (Kyle Allan Gallant) என்பவர் கைது செய்யப்பட்டு, ‘தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் துப்பாக்கியைப் பயன்படுத்தியமை’ (Discharge firearm with intent), ‘தோட்டாக்கள் நிரப்பப்பட்ட துப்பாக்கியைக் கைவசம் வைத்திருந்தமை’ (Possession of a loaded firearm) மற்றும் ‘தடை உத்தரவை மீறி துப்பாக்கியைக் கைவசம் வைத்திருந்தமை’ (Possession of a firearm contrary to prohibition order) ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் இன்னும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.
அவர் பிணை நீதிமன்றத்தில் (Bail court) ஆஜர்படுத்தப்படவிருந்தார்.
இதுகுறித்த விசாரணை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் டொராண்டோ காவல்துறையினரை 416-808-2510 என்ற எண்ணிலோ அல்லது கிரைம் ஸ்டாப்பர்ஸ் (Crime Stoppers) அமைப்பை இரகசியமாகவோ தொடர்புகொண்டு விபரங்களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
