கனடாவின் பிராம்ப்டன் (Brampton) மற்றும் மிசிசாகா (Mississauga) ஆகிய நகரங்களில் சில்லறை வர்த்தக நிலையங்களை (Retail stores) இலக்கு வைத்து நடத்தப்பட்ட பாரிய அளவிலான திருட்டுச் சம்பவங்கள் குறித்த விரிவான விசாரணைகளை அடுத்து, 65 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் மீது 545 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பீல் பிராந்திய பொலிஸார் (Peel Regional Police) தெரிவித்துள்ளனர்.
‘புரொஜெக்ட் பில்சர்’ (Project Filcher) எனப் பெயரிடப்பட்ட இந்த விசேட கூட்டுப் பொலிஸ் நடவடிக்கை, தொடர்ச்சியாகக் குற்றச் செயல்களில் ஈடுபடும் பழைய குற்றவாளிகளையும் (Repeat offenders) ஒழுங்கமைக்கப்பட்ட சில்லறை வர்த்தகத் திருட்டு கும்பல்களையும் இலக்கு வைத்து நடத்தப்பட்டது. இக் கும்பல் 350 இற்கும் மேற்பட்ட திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையதுடன், இதன் காரணமாக வர்த்தக நிலையங்களுக்கு 250,000 டொலருக்கும் அதிக நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் விபரம்:
இவ்விசாரணைகளின் போது மிசிசாகா, ரொறன்ரோ, பிராம்ப்டன் உள்ளிட்ட பல நகரங்களைச் சேர்ந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் மிசிசாகா நகரைச் சேர்ந்த ரையன் வில்லியம்ஸ் (39), யூசுப் ஹஜ்ஜார் (38), அமீர் நிக்பக்த் (41), ஜெய்டன் ஹில் (19), சுக்விந்தர் சிங் (28), மந்தீப் டூர் (48) மற்றும் ரொறன்ரோவைச் சேர்ந்த அவெரிலியன் அலெக்சாண்ட்ரோ டிராகன் (37) ஆகியோர் அடங்குவர்.
மேலும், நிரந்தர முகவரி அற்றவர்களான (No Fixed Address) நிக்கோலஸ் க்ளூயி (31), பெசில் அசாத் (21), சமந்தா சோமர்ஸ் (38), அமன்பிரீத் சாந்தவாலியா (33), ரொஷன்பீர் சிங் (27) மற்றும் ராகேஷ் பத்ரிநாராயண் (42) உட்பட 34 சந்தேகநபர்களும் இக் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பீல் பிராந்தியம் முழுவதும் இவ்வாறான ஒழுங்கமைக்கப்பட்ட சில்லறை வர்த்தகத் திருட்டுகள் (Organized retail theft) தொடர்ந்து அதிகரித்து வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள பொலிஸார், கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களில் பெரும்பாலோர் திட்டமிட்ட கூட்டுச் சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய பழைய குற்றவாளிகள் எனப் புலனாய்வாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
