கடந்த 2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் தனது முன்னாள் காதலியான மரினா நாகோலியா (Marina Nagolia) என்பவரைக் கொடூரமான முறையில் படுகொலை செய்த குற்றச்சாட்டில் டேனியல் மேடின் (Daniil Matin) என்ற 38 வயதுடைய நபருக்கு 25 ஆண்டுகள் பிணையில் வெளிவர முடியாத (No chance of parole) ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நீதிபதி மார்செல்லா ஹென்ஷல் (Justice Marcella Henschel) தலைமையில் ஐந்து வாரங்களாக நடைபெற்ற இந்த மேல்நீதிமன்ற விசாரணையின் முடிவில், நியூமார்க்கெட் (Newmarket) நடுவர் மன்றத்தினால் (Jury) டேனியல் மேடின் முதல்தரக் கொலைக் குற்றவாளியாகக் கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டிருந்தார்.
குற்றவாளிக்கான தண்டனையை அறிவித்து உரையாற்றிய நீதிபதி ஹென்ஷல், நாகோலியா தன்னை நம்பி ரிச்மண்ட் ஹில் (Richmond Hill) பகுதியிலுள்ள தனது வீட்டிற்குள் அனுமதித்த நிலையில், குற்றவாளி அவரது நம்பிக்கையைத் துரோகம் செய்து இந்த அதிபயங்கர வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். 43 வயதுடைய அந்தப் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சிக்கும் போதே, அவர் மீது பலமுறை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளதாக நீதிபதி சுட்டிக்காட்டினார்.
பின்னணி மற்றும் சான்றுகள்
ரஷ்யாவைச் சேர்ந்த முன்னாள் மொடலான மரினா நாகோலியா, டேனியல் மேடினுடன் சுமார் நான்கு ஆண்டுகள் பழகி வந்த நிலையில், பின்னர் அந்த உறவை முறித்துக் கொண்டுள்ளார். எனினும், மேடின் அவருடன் மீண்டும் இணைய முயன்றுள்ளார். நாகோலியா கியூபாவிற்கான தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய இரண்டு நாட்களில், ஓகஸ்ட் 25, 2023 அன்று, அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனையிட்ட போது, நாகோலியாவின் இடது கையில் உடைந்த உலோகக் கத்தி ஒன்றும், அவரது கூந்தலில் கத்தியின் உடைந்த துண்டொன்றும் காணப்பட்டுள்ளது. கொலையைத் தற்கொலையாகச் சித்தரிப்பதற்காகக் குற்றவாளியே அந்தக் கத்தியை அவரது கையில் திணித்து, படுக்கையறையில் இருந்த இரத்தக் கறைகளை மறைக்க முயன்றுள்ளார் என அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் நிரூபித்துள்ளது.
உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையின்படி, நாகோலியாவின் கழுத்து நெரிக்கப்பட்டமையினாலேயே (Neck compressions) மரணம் சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தின் போது குற்றவாளியும் தனது தொண்டைப் பகுதியைத் தானே கத்தியால் கீறி தற்கொலைக்கு முயன்ற நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
நீதிமன்றத் தீர்ப்பின் ஒரு பகுதியாக, குற்றவாளிக்கு ஆயுள் முழுவதும் ஆயுதங்களை வைத்திருக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், மரினா நாகோலியாவின் குடும்பத்தினருடன் எவ்வித தொடர்புகளையும் பேணக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
